ஆரணி:ஆரணியில் கிராம மக்கள் பயிற்சி பெற்று மரக்கழிவுகளில் இருந்து ஏராளமான கைவினை பொருட்கள் உருவாக்கியுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கதர் மற்றும் கிராமத்தொழில் வாரியம் சார்பில் மரக்கழிவுகளில் இருந்து கைவினைப் பொருட்கள் செய்வது குறித்து ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கைவினை கலைஞர்கள் மற்றும் இளைஞர்கள, கிராம மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த மாதம் 15ம்தேதி இப்பயிற்சி தொடங்கப்பட்டது.
இப்பயிற்சியில், மரக்கழிவுகளில் இருந்து பல்வேறு வகையான கைவினைப் பொருட்களான மகாத்மா காந்தியின் உருவ படம், மாட்டு வண்டி, தேர், கொக்கு, மீன், சீப்பு, பென்சில், முகம் பார்க்கும் கண்ணாடி, வீட்டு உபயோக பொருட்கள், இசைக்கருவிகள் என பல்வேறு பொருட்கள் கலைநுட்பத்துடன் தயார் செய்து, பயிற்சியில் கலைஞர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும், பயிற்சி பெற்ற கைவினை கலைஞர்களுக்கு கைவினை உபகரணங்கள் மற்றும் சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, மாநில கதர் மற்றும் கிராம தொழில் ஆணையம் இயக்குநர் சுரேஷ், பயிற்சி பெற்ற நபர்களுக்கு சான்றுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கினார்.