சென்னை, ஜூனதமிழ்நாடு மாநில நீதித்துறையில் உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக உள்ள 245 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு இன்று முதல் வரும் 30ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு ஆகஸ்ட் 19ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு மாநில நீதித்துறை உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக உள்ள 245 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
இப்பதவிகளுக்கான தேர்வுக்கு இன்று முதல் வருகிற 30ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சியின் இணையதளம்(www.tnpsc.gov.in, www.tnpscexams.in) வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணைய வழி விண்ணப்பங்களை ஜூலை 5ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் ஜூலை 7ம் தேதி இரவு 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம். இப்பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு ஆகஸ்ட் 19ம் தேதி நடக்கிறது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல்நிலை தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வு அக்டோபர் மாதம் 4 நாட்கள் நடக்கிறது.
அதாவது, அக்டோபர் 28ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மொழியாக்கம் தேர்வு நடக்கிறது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை முதல் தாள்(சட்டம்) தேர்வு நடக்கிறது. 29ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 3ம் தாள் தேர்வும் நடக்கிறது. இப்பதவிக்கான வயது வரம்பு, கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.