சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே பழையபாளையம் கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் சிவபாரதி. இவரது தோட்டத்தை, கொல்லிமலை திண்ணனூர் நாடு பெரிய சோளக்கண்ணிபட்டி பகுதியைச் சேர்ந்த மனோகரன்(47) குத்தகைக்கு எடுத்திருந்தார். அங்கு மனைவி செல்வி (42), மகன் யஸ்வந்த்(6) ஆகியோருடன் தங்கி விவசாய பணிகளை கவனித்து வந்தார். நேற்று மாலை பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்ற மனோகரன், மின் மோட்டார் அறையில் உள்ள சுவிட்சை ஆன் செய்த போது, மின்சாரம் பாய்ந்து அலறினார். சத்தம் கேட்டு அவரை காப்பாற்ற பிடித்து இழுத்த மனைவி செல்வி மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், தம்பதி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.