டெல்லி: ஜனாதிபதிக்கு அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள உரிமையை மறுக்கிறது ஒரு மனிதனின் அகந்தை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நேற்று, ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற வளாகத்தில் நாட்டின் மிகப்பெரிய நீதித்துறை வளாகத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு திறந்து வைத்தார். ஜனாதிபதிக்கு அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள உரிமையை ஒரு மனிதனின் அகந்தை மறுக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு உரிமை உள்ளது.
தனி ஒரு மனிதனின் சுய விளம்பர பேராசையால் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த முதல் குடிமகளின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியை பிரதமர் அவமதித்ததை அடுத்து நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக 20 கட்சிகள் அறிவித்துள்ளன. காங்கிரஸ், இடதுசாரிகள், டிஎம்சி, எஸ்பி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் உட்பட 19 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து புறக்கணிப்பை அறிவித்தன. ஜனநாயகத்தின் ஆன்மா உறிஞ்சப்பட்டபோது புதிய கட்டிடத்தில் எந்த மதிப்பையும் காணவில்லை என்று கூறினர்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா புதிய பார்லிமென்ட் கட்டிடத்தை திறந்து வைக்காவிட்டால், அவரது கட்சி கலந்து கொள்ளாது என ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். 19 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கையில், ஜனாதிபதி திரௌபதி முர்முவை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு, கடுமையான அவமதிப்பு மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.