Tuesday, April 30, 2024
Home » கே.வி.யில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியுற்ற 11ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு கோரி வழக்கு: மாணவர்கள் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

கே.வி.யில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியுற்ற 11ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு கோரி வழக்கு: மாணவர்கள் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

by Karthik Yash

சென்னை: பதினொன்றாம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்த வேண்டுமென்ற தீர்ப்பை எதிர்த்து கேந்திரிய வித்யாலயா சங்கதன் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் மாணவர்கள் தரப்பு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா (கே.வி.) பள்ளிகளில் 11ம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை எனவும் கூறி பல மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டும் என்பதையும், இது அவர்களின் எதிர்காலம் என்பதாலும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் 11ம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஒருமுறை நடவடிக்கையாக மூன்று வாரங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும் என்று கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து கே.வி.சங்கதன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் மனுவில், வேறு பள்ளியில் சேர மாற்றுச் சான்று பெறுவதற்காகவே உயர் நீதிமன்ற உத்தரவின்வின்படி குறிப்பிட்ட ஒரு மாணவிக்கு மட்டும் 2018ம் அண்டு துணைத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. அந்த உத்தரவு இந்த வழக்குக்கு பொருந்தாது. ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு எழுத அனுமதியில்லை என விதிகள் உள்ளது. இதை தனி நீதிபதியிடம் தெரிவித்த நிலையில் அதனை ஏற்காமல் அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர் கே.ராஜா ஆஜராகி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் மாணவர்கள் தரப்பு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணயை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like

Leave a Comment

14 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi