விழுப்புரம்: கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆறுதல் கூறினார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதில் 14 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது விழுப்புரத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
37 பேர் மேல் சிகிச்சை பெற்று வரும் சூழலில், நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார். இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சிகிச்சை பெற்றுவருபவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த எடப்பாடி, சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். எடப்பாடி பழனிசாமியுடன் விழுப்புரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.