சென்னை: தமிழ் மற்றும் சமஸ்கிருதம் இதில் எது பழமையான மொழி என்பதற்கு இன்னும் விடையும், முடிவும் கிடைக்காமலேயே உள்ளது. இதன் மூலம் பழமையான மொழி சமஸ்கிருதமா, தமிழா என்கிற விவாதம் நீண்டு கொண்டே செல்கிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்கிற திட்டத்தின் கீழ் மாணவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பீகார் மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதம் உருவாகி விட்டது. தமிழ் மொழியையும், சமஸ்கிருத மொழியையும் பழமையான மொழிகள் என்று கூறுவார்கள். ஆனால் இதில் எது பழமையான மொழி என்பதற்கு தற்போது விடையும், முடிவும் கிடைக்காமலேயே உள்ளது. இதன் மூலம் பழமையான மொழி சமஸ்கிருதமா இல்லை தமிழா என்கிற விவாதம் நீண்டு கொண்டே செல்கிறது. தமிழ் மொழியில் இருந்து சமஸ்கிருதத்துக்கு பல சொற்கள் வந்துள்ளன. அதே போல சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கும் பல்வேறு சொற்கள் வந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தமிழக மக்களிடம் பேசும்போது ஒரு கருத்தையும், மற்ற மாநில மக்களிடம் பேசும்போது சர்ச்சைக்குரிய வகையிலும் ஆளுநர் பேசி வருவது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* எனது திருமணம் குழந்தை திருமணம்
நான் இளம்வயதிலேயே திருமணம் செய்து கொண்டேன். எனது திருமணம் குழந்தை திருமணம். எனது மனைவி கல்லூரி சென்றது இல்லை. இருப்பினும் வாழ்க்கையில் எனக்கு பக்க பலமாக இருந்தார். நான் உலகத்தையே எதிர்க்கும் திறனை எனது மனைவி எனக்கு அளித்தார்.