சென்னை: பாட்டியுடன் கோயிலுக்குச் சென்றபோது மின்சாரம் பாய்ந்து 6ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொருக்குப்பேட்டை ஆர்கே நகர் மெயின் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மகன் கவின் (13) வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் இரவு தனது பாட்டியுடன் கொருக்குப்பேட்டை புத்தா தெருவில் உள்ள கோயிலுக்குச் சிறுவன் கவின் சென்றுள்ளான். கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு அங்கிருந்த சீரியல் பல்பை கவின் தொட்டுள்ளான். அப்போது கவின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மயக்கமடைந்த கவினை உடனே மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கவினை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவன் இறந்துவிட்டதாகக் கூறினர். இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.