சென்னை: திருவொற்றியூர்,சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன். அதே பகுதியில் மணி டிரான்ஸ்பர் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி இவரது, வங்கி கணக்கில் இருந்த ரூ. 1.25 லட்சம், 3 வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைப் பார்த்த சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, சாத்தான்காடு போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், சைபர் கிரைம் மூலம் விசாரணை செய்தனர்.
இதில், மணி டிரான்ஸ்பர் டீலரிடம் பணிபுரிந்து வேலை நீக்கப்பட்ட ஊழியர் ஒருவர், சீனிவாசனின் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி ரூ.1.25 லட்சம் பணத்தை திருடி உள்ளார். இதை அடுத்து பாடியநல்லூரைச் சேர்ந்த ராஜ்குமார் (32) என்ற அந்த முன்னாள் ஊழியரிடம் போலீசார் விசாரணை செய்தனர். இதில், தான் திருடியதை அவர் ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து நேற்று கைது செய்யப்பட்டு ராஜ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.