![](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/04/16-46.jpg?type=webp&quality=80)
திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள டிரான்ஸ்பார்மர், மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின் வயர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது செண்பகத்தோப்பு வனப்பகுதி. இங்கு புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள், கருஞ்சிறுத்தைகள், மரநாய்கள், காட்டெருமைகள், மலைப்பாம்புகள், ராஜநாகங்கள், மான்கள், மிளா மான்கள் மற்றும் அரிய வகை சாம்பல் நிற அணில்கள் என ஏராளமான வனஉயிர்கள் வசித்து வருகின்றன.
அதிக அளவில் வன உயிரினங்கள் வசித்து வருவதாலும் புலிகள் இருப்பதாலும் மத்திய அரசு இந்த பகுதியை திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் என அறிவித்துள்ளது. தமிழகத்தின் ஐந்தாவது புலிகள் காப்பகமாக திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் செயல்படுகிறது. இந்த வனப்பகுதியை பொறுத்தவரை அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் வனவிலங்குகள் மலை அடிவாரப் பகுதியில் நடமாடுவது வழக்கம்.
இங்கு வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளன. அதை போல் மின் கம்பங்கள் மற்றும் அதிலிருந்து மிகவும் தாழ்வாக செல்லும் மின் வயர்கள் என சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளது. இதனை யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் தொட்டாலே மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
எனவே இந்த புலிகள் காப்பகத்தில் உள்ள வனவிலங்குகளின் உயிரை பாதுகாக்கும் வகையில் டிரான்ஸ்பார்மர், மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின் வயர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.