Sunday, June 2, 2024
Home » 60 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரித்து உரமாக்க திட்டம்

60 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரித்து உரமாக்க திட்டம்

by Neethimaan

குமாரபாளையம், ஆக.22: குமாரபாளையம் நகராட்சியில், சாக்கடையில் வெளியாகும் 60 லட்சம் லிட்டர் கழிவுநீரை சேகரித்து சுத்திகரித்து, கழிவுகளை உரமாக்கி விவசாயத்திற்கு வழங்கும் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு அரசு ₹16.30 லட்சம் ஒதுக்கியுள்ளது. டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் காவிரி ஆறு மாசுபடுவதை தவிர்க்க முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. நதிக்கரைகள் குடியிருப்பாக மாற்றிய பிறகு, குடியிருப்புகளின் கழிவுகள் அனைத்தும் நதியில் விடுவதால் ஆறும், நீரும் மாசடைந்து வருகிறது. காவிரி ஆற்றின் கரையோரத்தில் உள்ள நகரங்களின் சாக்கடை கழிவுகள் அனைத்தும், ஆற்றை நோக்கியே வடிவமைக்கப்பட்டுள்ளது. வீடுகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் மாசடைந்த நீர், இறைச்சி கழிவுகள் அனைத்தும் சாக்கடை வழியாக காவிரியில் கலப்பது வாடிக்கையாகி விட்டது.

குறிப்பாக சாயச்சாலைகள், தொழிற்சாலை கழிவுகள் பகல் முழுவதும் தேக்கி வைக்கப்பட்டு, இரவு நேரத்தில் சாக்கடை கால்வாய், ஓடைகள் வழியாக வெளியேற்றுவதால் காவிரி ஆறு பெரிய சாக்கடையாகி வருகிறது. ரசாயன கழிவுகளில் உள்ளதை விட, குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவறை கழிவுகளில், நோய் பரப்பும் ஏராளமான கிருமிகள் உள்ளன. இந்த கிருமிகளின் சங்கமமாக விளங்கும் காவிரி நீரை பயன்படுத்தினால் புற்றுநோய், தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் ஏற்படுவதாக ஆய்வறிக்கைகள் மக்களை மிரட்டி வருகின்றன. சாயச்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்தப்படுத்துவதற்கு, பல்வேறு தொழில் நுட்பங்களும், அதை கண்காணிக்க மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளும் உள்ளனர். ஆனால் நகராட்சியில் குடியிருப்புகளில் இருந்து வெளியாகும் கழிவுகளை கட்டுப்படுத்த, எந்த விதமான விதிமுறைகளும் இல்லாததால், அனைத்து கழிவுகளும் காவிரி ஆற்றில் கலந்து சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகின்றன.

தொழிற்சாலை கழிவுகளை விட ஆபத்தான வீட்டு கழிவுகளை சுத்தப்படுத்தாவிட்டால், காவிரி ஆற்றை பாதுகாக்க முடியாது என்பதை உணர்ந்த தமிழக அரசு, நதியோர நகரமான குமாரபாளையம் நகர குடிருப்புகளில் இருந்து வெளியேறும், நகராட்சி சாக்கடை கழிவுகளை சேகரித்து சுத்தப்படுத்தும் வகையில், ₹16.30 லட்சம் மதிப்பில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, நகராட்சியில் இருந்து வெளியேறும் வீட்டு கழிவுகளை, 10 இடங்களில் மெகா சைஸ் கிணறுகள் அமைத்து சேகரிப்பது, அங்கிருந்து மின்மோட்டார் மூலம் கழிவுநீரை சேகரித்து, இயந்திரம் மூலம் நீரை சுத்திகரித்து, கழிவையும், நீரையும் தனித்தனியாக பிரிப்பது, கழிவுகளை உலர வைத்து இயற்கை உரமாக்கி, விவசாயத்திற்கு வழங்குவது, நீரை மறுசுழற்சி முறையில் மீண்டும் பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது என திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

குமாரபாளையம் நகராட்சி மணிமேகலை தெரு பகுதியில், காவிரி கரையோரம் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சாக்கடை வழியாக தினமும் வரும் 60 லட்சம் லிட்டர் கழிவுநீரை தேக்கி, சுத்திகரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நகராட்சி கழிவுகளை சுத்தப்படுத்தும் இந்த திட்டத்திற்கான டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று, தற்போது பரிசீலனையில் உள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்ட பின்னர், ஒரு வருட காலத்திற்குள் இந்த திட்டத்திற்கான கட்டுமான பணிகள் முடிந்து, நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் காலங்களில், காவிரி கரையோரங்களில் உள்ள பவானி, ஈரோடு, கரூர் நகராட்சிகளுக்கும் இத்திட்டம் வழங்கப்பட்டால், காவிரியாறு கழிவுகளின் ஆதிக்கத்தில் இருந்து மீட்கப்படும் என நம்பப்படுகிறது.

You may also like

Leave a Comment

18 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi