திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் 4 ஏழைகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. எம்எல்ஏ மற்றும் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஏழை, எளிய ஜோடிகளுக்கு திருக்கோயில் சார்பில் ரூ.50,000 மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டு, திருமணம் நடத்தப்படும் என சட்டமன்ற 2022-2023ல் அறிவிப்பு எண் 14ன்படி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் இன்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் 4 ஜோடிகளுக்கு காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் தலைமையில் திருமணங்கள் நடந்தது.
விழாவில், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், துணை தலைவர் பரசுராமன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக, மணமக்களுக்கு பட்டு சேலை, பட்டு வேட்டி மற்றும் ₹50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைகளுடன் கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி உத்திரவின்படி செங்கல்பட்டு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன் தலைமையில் கோயில் செயல் அலுவலர் குமரவேல் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.