Saturday, May 18, 2024
Home » தாயை பின்தொடர்ந்து சென்றபோது பண்ணை குட்டையில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலி

தாயை பின்தொடர்ந்து சென்றபோது பண்ணை குட்டையில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலி

by Lakshmipathi

*வாணியம்பாடி அருகே சோகம்

ஆலங்காயம் : வாணியம்பாடி அருகே தாயை பின்தொடர்ந்து சென்றபோது, பண்ணை குட்டையில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு சுண்ணாம்பு பள்ளம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(33), கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேவதி(24). இவர்களுக்கு 6 மற்றும் 4 வயது மகன்களும், 2 வயது பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ரேவதி நேற்றுமுன்தினம் மாலை 6.30 மணியளவில் வீடு வீடாக சென்று பால் ஊற்றுவதற்காக சென்றுள்ளார். அப்போது தாயை பின்தொடர்ந்து 4வயது மகன் கோகுல் சென்றார்.

இதை கவனிக்காமல் ரேவதி பால் ஊற்ற சென்றுவிட்டார்.இந்நிலையில் அவரது வீட்டின் அருகாமையில் உள்ள பண்ணை குட்டை அருகே கோகுல் சென்றபோது களிமண் சரிந்து தவறி குட்டையில் விழுந்து மூழ்கி உள்ளார். பின்னர் பால் ஊற்றிவிட்டு சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கு பிறகு வீடு திரும்பிய ரேவதி கோகுலை தேடி உள்ளார். ஆனால் கோகுல் வீட்டில் இல்லை. இதனால் பதற்றமடைந்த ரேவதி அக்கம் பக்கம் என பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பின்னர் பண்ணை குட்டையில் தவறி விழுந்திருக்கலாம் என்று சந்தேகத்தில் உறவினர்கள் உதவியுடன் பண்ணை குட்டையில் தேடிபார்த்தனர். அப்போது கோகுல் குட்டையில் மூழ்கி உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

குட்டையில் இருந்து மகனின் சடலத்தை எடுப்பதை பார்த்த பெற்றோர் கதறி அழுத சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலங்காயம் போலீசார், சிறுவனின் சடலத்தை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கலெக்டர் உத்தரவால் குட்டை மூடப்பட்டது

நிம்மியம்பட்டு பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் 40 அடி அகலம், 100 அடி நீளம், 5 அடி ஆழத்துடன் பண்ணை குட்டை வெட்டப்பட்டது. தற்போது கடந்த சில நாட்களாக பெய்த மழையால் குட்டை நிரம்பி உள்ளது. மேலும் பண்ணை குட்டையை சுற்றியுள்ள மண் ஈரப்பதத்துடன் உள்ளது. சிறுவனின் இறப்பு குறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பண்ணை குட்டையை உடனடியாக மூட வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். அதன்பேரில் ஊராட்சி மன்ற தலைவர் மேற்பார்வையில் நேற்று மாலை ஜேசிபி மூலம் பண்ணை குட்டை மூடப்பட்டது.

You may also like

Leave a Comment

five − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi