திருமலை: ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் தொரவாரி சத்திரம் மண்டலம் எகொல்லு கிராமத்தை சேர்ந்தவர்கள் முனிராஜா(24), ராம்(25), கவுதம்(24). 3 பேரும் நண்பர்கள். இன்று போகி பண்டிகை என்பதால் அக்கம் பக்கத்தினர் பலர் தங்களது வீட்டின் முன்பு பழைய பொருட்களை தீ வைத்து கொளுத்திக்கொண்டிருந்தனர்.
இவற்றை வேடிக்கை பார்ப்பதற்காக முனிராஜா, ராம், கவுதம் ஆகிய 3பேரும் ஒரே பைக்கில் இன்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றுகொண்டிருந்தனர். கலவகுண்டா பாலம் அருகே சென்றபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட முனிராஜா, ராம், கவுதம் ஆகியோர் படுகாயமடைந்து இறந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.