திருத்தணி: திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம், 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியை இம்மாதத்திற்குள் செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.இது குறித்து திருத்தணி நகராட்சி ஆணையர் ராமஜெயம் கூறுகையில், நகராட்சி எல்லைக்குள் சொத்து வரி செலுத்தும் உரிமையாளர்கள், நடப்பாண்டின் (2023-24) முதல் அரையாண்டிற்கான சொத்துவரியை இம்மாதம், 30ம் தேதிக்குள் செலுத்தினால் அதன் உரிமையாளர்களுக்கு, ஐந்து சதவீதம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அவ்வாறு, செலுத்தாமல், மே ஒன்றாம் தேதிக்கு மேல் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத் தொகை இழப்பத்துடன் அபராதமாக ஒரு சதவீதம் வட்டி தொகை சேர்த்து வரி செலுத்த நேரிடும்.
எனவே, சொத்து உரிமையாளர்கள், தங்களுது சொத்து வரியை இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்களிடம் ரொக்கமாகவும், காசோலை, வரைவோலை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகவும் செலுத்தும் வசதி ஏற்படுத்தியுள்ளது. மேலும், சொத்து வரியை https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மூலம், கிரிடிட், டெபிட் கார்டுகள் இன்டர்நெட் வங்கி மூலம் தங்களது சொத்துவரி செலுத்தும் வசதி ஏற்படுத்தியுள்ளது. எனவே அனைத்து உரிமையாளர்கள் ஏப்.30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தி, 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்று, நகராட்சி மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளுக்கு தங்களது பங்களிப்பினை வழங்க வேண்டும் என கூறினார்.