கம்பம் : கம்பம் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 2,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு விற்பனைக்காக கடத்தி செல்லப்படும் ரேஷன் அரிசியை தடுப்பதற்காக தேனி மாவட்டம், உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கம்பம்மெட்டு சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ேநற்று எஸ்ஐ பொன்குணசேகரன் மற்றும் போலீசார், கம்பம்மெட்டு மலைச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு நோக்கி சென்ற ஜீப்பை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டனர். அப்போது, டிரைவர் உட்பட 3 பேர் தப்பி ஓடினர்.உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், வாகனத்தை கைப்பற்றி சோதனை செய்ததில், உள்ளே 42 மூட்டைகளில் சுமார் 2,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை உத்தமபாளையம் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.