பெதுல்: வரும் 2027ம் ஆண்டில், உலகளாவிய எண்ணெய் தேவையில் சீனாவை முந்தி இந்தியா முதல் நாடாக மாறும்’ என சர்வதேச எரிசக்தி நிறுவனம் கணித்துள்ளது.கோவாவின் பெதுல் நகரில் இந்திய எரிசக்தி வார விழா நடைபெற்று வருகிறது. இதில் பிரான்சின் பாரீஸ் நகரை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச எரிசக்தி நிறுவனம் (ஐஇஏ) 2030ம் ஆண்டிற்கான இந்திய எண்ணெய் சந்தை நிலவர அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலக அளவில் தற்போது எண்ணெய் தேவையில் சீனா முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளன. கடந்த 2023ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் எண்ணெய் தேவை ஒரு நாளுக்கு 54.8 லட்சம் பீப்பாய் என்றிருந்தது.
இது 2030ல் ஒருநாளுக்கு 66.4 லட்சம் பீப்பாய் என அதிகரிக்கும்.2027ல் எண்ணெய் தேவையில் சீனாவை முந்தி இந்தியா உலகின் முதல் நாடாக இருக்கும்.இந்தியா தற்போது அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக 3வது பெரிய எண்ணெய் நுகர்வு நாடாக உள்ளது. அதன் எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி செய்கிறது. உள்நாட்டு உற்பத்தி குறைவதால் இந்த சார்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களில் கவனம் செலுத்தினால் ஒருநாளைக்கு 2 லட்சம் பீப்பாய் எண்ணெய் தேவையை குறைக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.