சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜூன் 10ம் தேதி பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டில் மாணவர், மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை வழங்குவதில் உள்ள கால அளவை கருத்தில் கொண்டு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கடந்த 2023-24ல் வழங்கப்பட்ட பழைய பயண அட்டை, பள்ளிகளில் வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் மாணவர்கள் சென்று திரும்பலாம்.
இதேபோன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவியர்களும் இச்சலுகை பொருந்தும். பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து இம்மாத இறுதிக்குள் பஸ் பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி துவங்கும், முடியும் நேரங்களில் பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணிக்க அலுவலர்கள் கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ, மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி இறக்கிச் செல்ல அனைத்து நடத்துநர், ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.