மாஸ்கோ: கடந்த ஒரு ஆண்டில், சுமார் 100 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் இணைந்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி வரும் 24ம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. ஆனால் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த போரில் உக்ரைனின் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. இதனிடையே ரஷ்ய தரப்பில் இந்தியர்கள் சிலர் எல்லையில் போரிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த அந்நாட்டின் பாதுகாப்புத் துறை; கடந்த ஒரு ஆண்டில், சுமார் 100 இந்தியர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளனர்.
ஓராண்டு கால ஒப்பந்தத்தின் படி, மாதம் ரூ.1.95 லட்சம் ஊதியம் மற்றும் ரூ.50,000 போனஸ் என அவர்களிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போரில் போரிட இந்தியர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியர்கள் மட்டுமல்லாது மற்ற நாடுகளை சேர்ந்தவர்களும் எல்லையில் போரிட வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி உள்ளனர். அவர்களது பாஸ்போர்ட் பறிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த புகார் குறித்து முறையாக ஃபாலோ செய்து வருவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.