கும்பகோணம், ஏப்.6: கும்பகோணம் அருகே சுந்தர பெருமாள் கோவிலில் விவசாயியை கத்தியால் குத்தியவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா சுந்தரபெருமாள் கோவில் ஊராட்சியை சேர்ந்தவர் வீராசாமி மகன் துரைராஜ் (58). விவசாயி. இவருக்கும், அதே ஊரில் வசிக்கும் கோவிந்தராஜ் மகன் அறிவழகன் (52) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு அறிவழகன், விவசாயி துரைராஜை கத்தியால் குத்திவிட்டார். இதில், படுகாயமடைந்த துரைராஜ் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திய அறிவழகனை கைது செய்தனர். இந்த வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.2ல் நீதிபதி பாரதிதாசன் நேற்று தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் குற்றவாளி அறிவழனுக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய் 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.