ஈரோடு, ஏப். 30: கர்நாடக மா நிலம், பீஜப்பூர் மாவட்டம், ஹெக்டில் பகுதியைச் சேர்ந்தவர் கேமு (55). இவரது மகள் சுசீலா (20). இவருக்கும், ஈரோடு மாவட்டம், கடம்பூர், காடகநல்லி பகுதியை சேர்ந்த புட்டுசாமி (26) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலையில், புட்டுசாமியின் விவசாய நிலத்தில் சுசீலாவின் தந்தை கேமு உள்ளிட்டோர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, தனக்கு தாகமாக இருப்பதாக கேமு கூறியுள்ளார். இதையடுத்து, மகள் சுசீலா வீட்டுக்கு சென்று தந்தைக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு வரும்போது, திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக தந்தை கேமு, கணவர் புட்டுசாமி ஆகியோர் ஓடிச்சென்று, சுசீலாவின் கையில் இரும்பு கம்பியை கொடுத்துள்ளனர். இருப்பினும் சுசீலா, சில நிமிடங்களில் உயிரிழந்தார். இதுகுறித்து, கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சுசீலாவுக்கு திருமணமாகி 3 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.