மூணாறு, மார்ச் 21: கேரள மாநிலம், மூணாறு அருகே பல வருடங்களாக சேதமடைந்துள்ள எஸ்டேட் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவிகுளம் ஊராட்சியில் மாட்டுப்பெட்டி, தென்மலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு மாட்டுப்பெட்டி டாப், குட்டியார், தென்மலை டாப் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மருத்துவமனை, வேலைக்குச் செல்லுதல், அத்தியாவசிய பொருள்கள் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகளுக்காக மூணாறுக்கு சென்று வர வேண்டும். இதற்காக மாட்டுப்பெட்டி-தென்மலை எஸ்டேட் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
சுமார் 10 கி.மீ. நீளமுள்ள இந்தச் சாலை கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக் காலத்தில் இந்தச் சாலையில் செல்வோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. அவசர தேவைக்கு வாடகை வாகன ஓட்டிகளை இந்தப் பகுதி மக்கள் அழைத்தால், சாலை சேதமடைந்துள்ளதை காரணமாகக் கூறி வர மறுக்கின்றனராம். மேலும், இங்கு ஆரம்ப பள்ளியும் உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் சேதமடைந்துள்ள சாலையால் அவதிப்படுகின்றனர். எனவே, இந்தச் சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.