சேலம், ஏப்.4: சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, முதல்வரின் முகவரித்துறையின் கீழ் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற மனுக்களின் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் துறை வாரியாக முதல்வரின் முகவரி மனுக்கள் பற்றி அமைச்சர் கேட்டறிந்தார். மக்களின் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
அந்தவகையில், பொதுமக்களின் குறைகளைக் களைவதில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க ‘‘முதல்வரின் முகவரி’’ என்ற தனித்துறையை உருவாக்கினார். இத்துறையின் வாயிலாக மக்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து மனுக்களையும் கோரிக்கைகளின் தன்மைக்கு ஏற்ப பகுத்தாய்வு செய்து, அம்மனுக்களை விரைவாக சீரிய முறையில் தீர்வு காண்பதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். துறை சார்ந்த அலுவலர்கள், முதல்வரின் முகவரித்துறையின் மனுக்களின் மீது உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். குறிப்பாக, இத்திட்டத்தில் சேலம் மாவட்ட அலுவலர்கள், சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
தொடர்ந்து, இத்திட்டத்தில் மனுக்களின் மீது உடனடி தீர்வு கண்டு, சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு கேடயங்களை அமைச்சர் வழங்கினார். மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2021-22ம் ஆண்டிற்கான சிறந்த மாணவ, மாணவியர் விடுதிகள் எனத் தேர்வு செய்யப்பட்ட விடுதிகளின் காப்பாளர்களுக்கு பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன், எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், துணைமேயர் சாரதாதேவி, மாவட்ட எஸ்பி சிவக்குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங் ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.