சாயல்குடி, ஏப்.13: கடலாடி காமாட்சியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவில் மழை பெய்ய வேண்டி பக்தர்கள் உடலில் சேற்றை பூசி விநோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலாடி காமாட்சியம்மன் கோயில் வருடாந்திர பொங்கல் விழா கடந்த செவ்வாய் கிழமை காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல்நாள் நிகழ்ச்சியாக கணபதி ஹோமம், யாகச்சாலைகள் வளர்க்கப்பட்டது. 7 சிறுமிகள் சப்த கன்னிமார்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பாத பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. இரவில் பெண்கள் கும்மி அடித்தும், இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடியும் மகிழ்ந்தனர்.
தொடர்ச்சியாக அம்மனுக்கு சுமங்கலி பூஜை, திருவிளக்கு பூஜை, கொலுமாவு பூஜை, காவு கொடுத்தல் பூஜை, பால்குடம், பூத்தட்டு ஊர்வலம், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதன் ஒரு பகுதியாக மழை பெய்ய வேண்டி நேற்று சிறுவர்கள் முதல் இளைஞர்கள், முதியவர்கள் வரை உடலில் சேறை பூசிக்கொண்டு சேத்தாண்டி வேஷம் போட்டு கடலாடியின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கொடி இறக்கத்துடன் இன்று திருவிழா நிறைவடைகிறது.