மயிலாடுதுறை, அக்.8: மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி சார்பில் நடைபெறும் தூய்மை பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட வார்டு 23 மாயூரநாதர் சன்னதி தெருவில் குடியிருப்பு வீடுகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்து தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதை கலெக்டர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து வார்டு 8 போலீஸ் ஸ்டேஷன் சாலையில் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதையும், வார்டு 23ல் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.94 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் ஆயிக்குளத்தினை மேம்படுத்தப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார்.
அப்போது ஆயிக்குளம் மேம்படுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு நகராட்சி ஆணையிரிடம் அறிவுறுத்தினார். பின்னர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, காவல் நிலையத்தில் குற்றப்பதிவேடு விபரங்களை காவலர்களிடம் கேட்டறிந்தார். காவல் நிலையம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் சங்கர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.