கோவை, மே 12: கோவை பாலக்காடு ரோட்டில் கடந்த ஆண்டு பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்தது. இந்த பணி முடிந்ததும் ரோட்டில் மண் போட்டு மூடி விட்டனர். ரோட்டின் சில பகுதிகளில் தார் தளம் அமைக்கப்பட்டது. ஆனால், குனியமுத்தூர் அரசு பள்ளி முதல் சுகுணாபுரம் வரையில் உள்ள ரோட்டில் தார் அமைக்கப்படவில்லை. இந்த பகுதி ரோடு பெயர்ந்து புழுதி காடாக மாறி விட்டது. ரோட்டில் திட்ட பணிகள் முடிந்து 30 நாளில் தார் தளம் அமைக்க வேண்டும். ஆனால், பல மாதங்களாகியும் சாக்கடை பணி முடிந்து ரோட்டை சீரமைக்காமல் விட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கனரக வாகனங்கள் அதிகமாக செல்லும் இந்த ரோடு புழுதி காடாகவும் மழை காலங்களில் சகதியாகவும் மாறி விடுகிறது.மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில்,‘‘ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தின் இன்னும் பணி துவக்கவில்லை. விரைவில் பணி நடத்த பல மாதம் முன்பே தெரிவிக்கப்பட்டது. பணிகள் நடத்தாமல் இருப்பது குறித்து பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். இந்த பகுதி ரோட்டில் விரைவில் தார் தளம் அமைக்கப்படும்’’ என்றனர்.