மதுரை, ஏப். 6: மதுரை கீரைத்துறை இருளப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முத்துராமலிங்கம்(25), ஆட்டோ டிரைவர். இவர் 10ம் வகுப்பு மாணவி ஒருவரை ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார். ஆனால், இவரது காதலை அந்த மாணவி ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம், பள்ளிக்குச் சென்ற மாணவியை வழிமறித்து தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனக்கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து, அந்த மாணவி மதுரை அனைத்து மகளிர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, மாணவிக்கு மிரட்டில் விடுத்த ஆட்டோ டிரைவர் முத்துராமலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.