நெல்லை, ஆக. 27: நெல்லை விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வள்ளியூர் மாணவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு ஆறுதல் கூறினார். நெல்லை மாவட்டம், வள்ளியூர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளி மாணவ, மாணவிகள் 22 பேர் வேனில், பாளை. அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு ஜி்ம்னாஸ்டிக் பயிற்சி மற்றும் போட்டிக்காக வந்து கொண்டிருந்தனர். நெல்லை அரசு மருத்துவமனை அருகே வேன் வந்த போது, வேனின் பின்பக்க டயர் திடீரென வெடித்து, நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் 4 ஆசிரியர்கள் உள்பட 22 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களை தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, நெல்லை அரசு மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சையளிக்கும்படி அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரேவதி பாலனிடம் கேட்டுக் கொண்டார். அப்போது பாளையங்கோட்டை ஒன்றிய திமுக செயலாளரும், யூனியன் சேர்மனுமான கேஎஸ் தங்கப்பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ ஐயப்பன், மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், ஒன்றிய திமுக செயலாளர்கள் களக்காடு பி.சி. ராஜன், ராதாபுரம் ஜோசப் பெல்சி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.