கல்வராயன்மலை, மே 3: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள தாழ்மொழிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் செந்தில்குமார் என்பவர் விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் ஒற்றைக்குழல் கொண்ட நாட்டுத்துப்பாக்கியை அரசு அனுமதி இல்லாமல் பதுக்கி வைத்திருப்பதாக கரியாலூர் உதவி ஆய்வாளர் மணிகண்டனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கரியாலூர் தனிப்பிரிவு காவலர் பிரபு மற்றும் போலீசார் அந்த பகுதியில் சென்று சோதனை செய்தபோது அங்கு அரசு அனுமதி இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்து செந்தில்குமாரையும் கைது செய்தனர். மேலும் இதேபோல் எருக்கம்பட்டு கிராமத்திலும் விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் இருந்தும் ஒரு நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.