நாகப்பட்டினம், மார்ச்11: நாகப்பட்டினத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஆயிரத்து 485 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.தேசிய சட்டப் பணிகள் ஆணை குழு அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இருந்து சிவில் வழக்குகள், சமரசத்திற்கு எடுத்து கொள்ளக்கூடிய கிரிமினல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், பண மோசடி வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள், உள்ளிட்ட 2 ஆயிரத்து 972 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆயிரத்து 485 வழக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
இதில் ரூ.3.30 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. போக்சோ நீதிமன்ற மாவட்ட நீதிபதி மணிவண்ணன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கார்த்திகா, சார்பு நீதிபதி சீனிவாசன், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் நாகப்பன், சண்மிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வட்ட சட்ட பணிகள் குழு மூலம் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.