பாடாலூர், மார்ச் 19: பெரம் பலூர் அருகே வீடு புகுந்து மூதாட்டியின் 3 பவுன் செயினை பறித்து விட்டு அவரை வீட்டுக்குள் தள்ளி கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு தப்பிஓடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே செட்டிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி மனோன்மணி(72). கணவர் இறந்து விட்டதால் இவர் வீட்டின் மாடியில் தனியாக வசித்து வருகிறார்.
இவர் நேற்று முன் தினம் காலை 11.30 மணியளவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் வீட்டுக்குள் புகுந்து மனோன்மணி கழுத்திலிருந்த 3 பவுன் செயினை பறித்துள்ளார். அப்போது சத்தம்பேட்ட மனோன்மணியை வீட்டுக்குள் தள்ளி கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு மர்மநபர் தப்பி ஓடி விட்டார். மனோன்மணியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து விட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். டிஎஸ்பி பழனிசாமி விசாரணை நடத்தினார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.