செய்தியாளர்களை சந்தித்த தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறியதாவது,கடந்த முறை வந்த போது காரைக்கால் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து தூய்மைப் பணியாளர்களின் நிலை மிக மோசமாக இருந்தது.ஆனால் தற்போது நிலைமை நன்கு மாறியுள்ளது .கடந்த முறை ஊதியமே இல்லை என வேதனை தெரிவித்த பணியாளர்கள் தற்போது ஊதியம் காலதாமதம் ஆவதாக கூறினர். இதற்கும் விரைவில் தீர்வு காண தொழிலாளர் நலத்துறை அதிகாரியிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர்களுக்கு பணிக்கால போதிய பாதுகாப்பு இல்லை. ஒப்பந்த பணியாளர்களுக்கு மாதம் 4 நாட்கள் விடுமுறை அளிக்காமல் 30 நாட்கள் வேலை வாங்குவதாக வந்த புகாரின் மீதும் விசாரணை நடத்தி ஒப்பந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அரசு விடுமுறை நாட்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கு இருமடங்கு ஊதியம் வழங்காதிருந்தால் அதனை உடன் பெற்று தரவும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் தூய்மை பணியாளர்களுக்காக ஆணையம் அல்லது வாரியம் அமைக்க கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.