திருச்சி, ஏப்.12: திருச்சி கஞ்சா வியாபாரி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியை சேர்ந்தவர் நவநீத கிருஷணன் மகன் ஜெய் என்ற ஜானகி ராமன் (45). இவர் கடந்த மார்ச்.22ம் தேதி அப்பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவில் பின்புறம் கைப்பையில் 2.450 கிலோ கஞ்சாவை வைத்துக் கொண்டு விற்றுக் கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்றதாக 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதையடுத்து ஜானகிராமனின் தொடர் குற்ற செயல்களை தடுக்கும் விதமாக எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர் குறித்த குற்ற அறிக்கைகளை மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியாவிடம் சமர்ப்பித்தார். குற்ற அறிக்கையை பரிசீலனை செய்த கமிஷனர் சத்தியப்பிரியா குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ஜானகிராமன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆணை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜானகி ராமனிடம் சார்வு செய்யப்பட்டது.