திருக்காட்டுப்பள்ளி, ஆக. 26: திருக்காட்டுப்பள்ளி அருகே வைக்கோல் ஏற்றி வந்த வாகனம் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே முல்லைக்குடியில் ஈரோடு கோபிசெட்டிபாளையம் பகுதியில் இருந்து குளந்தான் மகன் குமரவேல்(46) என்பவர் ஈச்சர் வண்டியில் வைக்கோல் ஏற்றி வரும் பொழுது வயல்வெளிகளில் குறுக்கே செல்லும் மின்கம்பியில் உரசியதில் வைக்கோல் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட தீயணைப்பு நிலைய உதவி அதிகாரி கணேசன் வந்து பார்வையிட்டார். இந்த தீவிபத்தில் டிரைவர் குமரவேல் என்பவருக்கு கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை தஞ்சாவூர மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசில் குமரவேல் மனைவி பரிமளா புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துரையரசன் விசாரணை நடத்தி வருகிறார்.