திருவாரூர், பிப். 11: தலைக்கவசம் அணிவதன் அவசியம் வலியுறுத்தி நடந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் சாரு தொடங்கி வைத்தார். திருவாரூர் மாவட்ட போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை சார்பில் 35வது சாலை பாதுகாப்பு விழாவினையொட்டி தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை பழைய பேருந்து நிலையத்திலிருந்து எஸ்.பி ஜெயக்குமார் முன்னிலையில் கலெக்டர் சாரு துவக்கி வைத்து பேசியதாவது, சாலை பாதுகாப்பு வார விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் வாகன ஓட்டிகள் ஹெல்மேட் அணிய வேண்டும், சாலை பயணங்களில் செல்போன் பயன்படுத்தக்கூடாது, சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் போன்றவைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் இந்த இருசக்கர வாகனப் பேரணி நடத்தப்பட்டுள்ளது. மேலும் சாலை விபத்து இறப்பு சதவிகிதம் ஒவ்வொரு ஆண்டும் குறைய வேண்டும் என்பதுடன் விபத்தே இல்லா நிலை உருவாக நாம் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பண்ணன், நகராட்சி கமிஷ்னர் மல்லிகா உட்பட பலர் கலந்துகொண்டனர்.