திருத்துறைபூண்டி, மே 12: திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2023, 24ன் கீழ் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்களுடைய நலன் கருதி திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட திருவாரூர் சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் இன் எதிர்புறம் ஒரு தற்காலிக பஸ் நிலையமும், திருவாரூர் சாலையில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனை ஒட்டி ஒரு தற்காலிக பஸ் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி தற்காலிக பஸ் நிலையத்தில் பெட்ரோல் பங்குக்கு எதிர்ப்புறம் உள்ள பஸ் நிலையத்தில் வேதாரண்யம் மார்க்கமாக வரக்கூடிய பஸ்களும் மன்னார்குடி வழியாக வரக்கூடிய பஸ்களும் இயக்கப்படும். மேலும் கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள பஸ் நிலையத்தில் திருவாரூர் மார்க்கமாக வரக்கூடிய பஸ்கள் நாகப்பட்டினத்தில் இருந்து வரக்கூடிய பஸ்கள் பட்டுக்கோட்டையில் இருந்து வரக்கூடிய பஸ்கள் நாளை (12ம் தேதி) ஞாயிறு கிழமை முதல் இயக்கப்படும். மேலும் ஊர்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் தங்களுடைய பயணத் திட்டத்தை மேற்கண்ட பஸ் நிலையத்தை பொறுத்து வகுத்துக் கொள்ள இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.