தரங்கம்பாடி, மே 12: தரங்கம்பாடி பகுதியில் குறுவை சாகுபடி பணிக்கு நடவு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் குறுவை சாகுபடியில் இறுதிக்கட்ட பணியான நாற்று நடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆயப்பாடி, திருக்களாச்சேரி, எடுத்துகட்டி, சங்கரன்பந்தல், நல்லாடை, கார்குடி, திருவிளையாட்டம், ஈச்சங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பம்ப்செட் மூலம் குறுவை சாகுபடியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் சாகுபடியின் இறுதிகட்ட பணியான நாற்று பறித்தல், நடவு செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடவு பணியில் நடவு இயந்திரம் மூலம் நடவு செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் ஈச்சங்குடி கிராமத்தில் ஆண் தொழிலாளர்கள் நாற்று பறிக்க பெண் தொழிலாளர்கள் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் பெண் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. தொழிலாளர்களை கொண்டே சாகுபடி செய்யும் பணி ஈச்சங்குடியில் தொடர்ந்து நடந்து வருகிறது.