உத்தமபாளையம், மே 27: தேவாரம் அருகே உள்ள தே.ஓவுலாபுரத்தை சேர்ந்தவர் சின்னமருதுபாண்டி (30) கூலி தொழிலாளி. இவரும், இவரது நண்பர் ரோட்டுப்பட்டியை சேர்ந்த ராசாவும் நேற்று முன்தினம் கம்பத்திற்கு டூவீலரில் சென்றுவிட்டு, மீண்டும் தேவாரத்திற்கு திரும்பினர். கோவிந்தன்பட்டி-அனுமந்தன்பட்டி நான்கு வழிச்சாலையில் வந்தபோது, எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக இவர்கள் வந்த டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம், பக்கத்தினர் சின்னமருதுபாண்டியையும், ராசாவையும் மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்பு இருவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னமருதுபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். ராசா சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உத்தமபாளையம் போலீசார் காரை ஓட்டி வந்த கேரளா மாநிலம், சாந்தினிகாட்டை சேர்ந்த ஜான்சி தேவியை (51) கைது செய்தனர்.