ஜெயங்கொண்டம், மே11: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் இருந்து சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். இம்மருத்துவமனையில் டயாலிசிஸ் இயந்திரம் இல்லாததால் அரியலூர் மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு தொடங்க வேண்டுமென நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின்பேரில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கென டயாலிசிஸ் பிரிவு நேற்று துவங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் தலைமை மருத்துவ அலுவலர் பானுமதி தலைமை வகித்தார்.
உடையார்பாளையம் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் ரவிசங்கர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவர்கள் டாக்டர் மதியழகன், ராஜ வன்னியன், செந்தில்குமார் மற்றும் தலைமை செவிலியர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் நம்பிக்கை மைய ஆலோசகர் முருகானந்தம் மற்றும் மருத்துவ குழுவினர்கள் மருத்துவ பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.