ஜெயங்கொண்டம், ஆக.22: ஜெயங்கொண்டம் அருகே உள்ள வட வீக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாலையா. இவரது சகோதரர்கள் பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன். இதில் பாலையா வடவீக்கத்தில் வசித்து வருகிறார். பாலகிருஷ்ணன் ஜெயங்கொண்டத்திலும் ராதாகிருஷ்ணன் காட்டுமன்னார்குடியிலும் வசிக்கின்றனர். பாலையாவிற்கும் இவரது மூத்த அண்ணன் பாலகிருஷ்ணனுக்கும் வீட்டுமனை சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. பாலையா தண்டலையில் ஒரு கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். பாலகிருஷ்ணன் கடந்த வாரம் சாமி கும்பிடுவதற்காக கோயிலுக்கு வந்தபோது பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்த முன்விரோதம் காரணமாக பாலகிருஷ்ணன் மகன் தாமரைச்செல்வன்(24) மற்றும் பெயர் தெரியாத நபர்கள் கையில் கத்தி அறிவாளுடன் சென்று 20ம் தேதி அன்று பாலையாவை பல இடங்களில் வெட்டியதாக தெரிகிறது. படுகாயம் அடைந்த அவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்கு பதிவு செய்து தாமரைச்செல்வன்(24) மற்றும் வசீகரன்(21) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.