ராஜபாளையம், ஏப்.4: ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயிலில் நேற்று பூக்குழித் திருவிழா நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் அம்மன், பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நேற்று நடந்தது.
திரளான பக்தர்கள் மற்றும் பெண்கள் பெண்கள் முளைப்பாரி எடுத்தும், ஆயிரங்கண் பானை எடுத்தும் ஊர்வலமாக சென்றனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா வந்தார். தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் ராஜபாளையம். சேத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்தனர்.