செம்பனார்கோயில், மார்ச் 16: செம்பனார்கோயில் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சியில் 2022-23ம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து சமூக தணிக்கை செய்யப்பட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சமூக தணிக்கை பிரிவு உதவி இயக்குநர் பத்மநாபன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கிராம மக்கள் முன்னிலையில் 2022-23ம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து சமூக தணிக்கை செய்யப்பட்ட விவரம் படிக்கப்பட்டது. தொடர்ந்து மூன்று பேருக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வள அலுவலர் செந்தில், வட்டார வள அலுவலர் உமா மகேஸ்வரி, ஊராட்சி செயலர் மனோகர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமாராணி மற்றும் கிராம வள அலுவலர்கள் கலந்து கொண்டனர்.