பாடாலூர், மார்ச் 20: செட்டிக்குளத்தில் மினி டிராக்டர் மோதி பேருந்துக்கு காத்திருந்த 2 மாணவிகள்,வாலிபர் காயமடைந்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அருகே உள்ள நக்கசேலத்தை சேர்ந்த ராமராஜ் மகள் சஞ்சனா (15), சிறுவயலூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் மகள் ரங்கிஷா (14) ஆகிய இருவரும் பேருந்துக்காக நேற்று செட்டிகுளம் தேரடி பேருந்து நிறுத்தத்தில் காத்து இருந்தனர். அப்போது அந்த வழியாக செட்டிகுளத்தை சேர்ந்த அங்குசாமி மகன் ஹரிசங்கர் (21). பைக்கில் வந்தார். அப்போது குரூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரஞ்சித் (45) செட்டிகுளத்திற்கு மாவு அரைப்பதற்காக மினி டிராக்டர் ஓட்டி வந்தார். அந்த மினி டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து ஹரிசங்கர் மீது மோதியதோடு அருகில் பேருந்திற்காக காத்திருந்த மாணவிகள் சஞ்சனா, ரங்கிஷா மீது மோதியது. இதில் 3 பேர் காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பாடாலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.