குளித்தலை, மார்ச் 19: சத்தியமங்கலம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி மற்றும் அரசு திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி எஸ் எம் சி தலைவர் புவனேஸ்வரி தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் முன்னிலையிலும் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜோதி இராமலிங்கம் தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் பள்ளியின் கணக்கெடுப்பு பகுதி அனைத்திற்கும் சென்று அதில் அரசின் பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் அரசு பள்ளியில் சேர்வதினால் காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம், இலவச பாட நூல்கள், இலவச சீருடைகள், காலணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்ட நன்மைகள் குறித்த விளக்கத் துண்டு பிரசுரங்களை ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் குமார் வழங்கினார். இதில் வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணியின் போது எல்கேஜி யுகேஜி மற்றும் முதல் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. முடிவில் ஆசிரியர் மணிமாறன் நன்றி கூறினார்.