கோவை, மார்ச் 21: தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 19-ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, தேர்தல் தொடர்பான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கோவை, பொள்ளாச்சி ஆகிய இரண்டு பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. மாவட்டத்தில் 15 லட்சத்து 9 ஆயிரத்து 906 ஆண் வாக்காளர்கள், 15 லட்சத்து 71 ஆயிரத்து 93 பெண் வாக்காளர்கள் மற்றும் 3-ம் பாலினத்தவர்கள் 595 பேர் என மொத்தம் 30 லட்சத்து 81 ஆயிரத்து 594 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டத்தில் 3,077 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 1,500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை 2-ஆக பிரிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து கோவை மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கூடுதலாக 19 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 3,077-ல் இருந்து தற்போது 3,096 வாக்குச்சாவடிகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மேட்டுப்பாளையம் 321 வாக்குச்சாவடி, சூலூர் 332 வாக்குச்சாவடி, கவுண்டம்பாளையம் 435 வாக்குச்சாவடி, கோவை வடக்கு 300 வாக்குச்சாவடி, தொண்டாமுத்தூர் 312 வாக்குச்சாவடி, கோவை தெற்கு 251 வாக்குச்சாவடி, சிங்காநல்லூர் 324 வாக்குச்சாவடி, கிணத்துகடவு 316 வாக்குச்சாவடி, பொள்ளாச்சி 269 வாக்குச்சாவடி, வால்பாறை 236 வாக்குச்சாவடி என வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தவிர 10 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு தொகுதிக்கு ஒன்று வீதம் மொத்தம் 10 மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.