பழநி, மார்ச் 17: பழநி முருகன் கோயிலில் தமிழக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் உழவார பணி நேற்று துவங்கியது. இதில் திருநெல்வேலி, ராமநாதபுரம், மதுரை, கோவை, திருப்பூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரம் சிவனடியார்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அடிவாரம் தனியார் மண்டபத்தில் சிவனடியார்களுக்கு கூட்டம் நடந்தது. பழநி கோவில் அறங்காவலர்கள் சுப்பிரமணியன், ராஜசேகரன் கலந்து கொண்டு உழவார பணியை துவங்கி வைத்தனர்.
பின்னர் சிவனடியார்கள் பழநி முருகன் கோயிலின் வெளிப்புற பகுதி, பாதவிநாயகர் கோயில் மண்டபங்களில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது கோயில், மலைப்பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டது. இந்த பணி இன்றும் நடைபெற உள்ளதாக கோயில் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.