Wednesday, May 15, 2024
Home » கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு வழங்காததால் தேர்தல் புறக்கணிப்பு

கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு வழங்காததால் தேர்தல் புறக்கணிப்பு

by Arun Kumar

 

நாகப்பட்டினம், மார்ச் 11: ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் விரிவாக்க பணிக்காக நிலம் கொடுத்த சாகுபடி தாரர்கள், கூலி தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.நாகூர் அருகே பனங்குடியில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் எண்ணை சுத்திகரிப்பு ஆலை நிறுவனம் இயங்கி வருகிறது. ஆலை விரிவாகத்திற்காக ரூ.31 ஆயிரத்து 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக பனங்குடியை சுற்றி ஆயிரத்து 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு அங்கு பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து பனங்குடியில் ஜனவரி மாதம் 29ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சிபிசிஎல் அதிகாரிகள் நிலம் அளவிடும் பணி மேற்கொண்டனர்.

அப்போது நிலத்திற்கான இழப்பீட்டு தொகையை வழங்காமல் நிலம் அளவீடு செய்யக்கூடாது என விவசாயிகள் அளவிடும் பணியை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் நேற்று பனங்குடியில் அமைந்துள்ள செல்வமகா காளியம்மன் கோயிலில் சிபிசிஎல் விரிவாக்க பணிக்காக நிலம் கொடுத்த விவசாயிகள், நில உரிமை தாரர்கள், சாகுபடி தாரர்கள், கூலித் தொழிலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.அப்போது சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தியதற்கு 2013 மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றம் சட்டத்தின்படி சாகுபடி தாரர்கள், கூலி தொழிலாளர்கள் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். நில உரிமைதாரர்களுக்கு சிலருக்கு நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்காமல் உள்ளது.

எனவே விவசாயிகளின் நியாயமான சட்டத்திற்கு உட்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகு சிபிசிஎல் நிறுவனம் பணிகளை தொடங்க வேண்டும். இதில் ஒன்றிய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும். இல்லையெனில் வரும் நாடாளுமன்ற தேர்தலை பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம், முட்டம், உத்தமசோழபுரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் புறக்கணிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

You may also like

Leave a Comment

17 − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi