நாகர்கோவில், அக்.8 : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் சோதனை மேற்கொண்ட மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரை மாவட்ட தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் நடத்தி வரும் போராட்டங்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றும் போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி குமரி மாவட்டத்திலும் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் டாக்டர் சுரேஷ் தலைமையில் அரசு மருத்துவமனைகள் மற்றும் குமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். இந்த போராட்டத்தால் சிகிச்சைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. டாக்டர்களின் போராட்டத்தில் பயிற்சி, டாக்டர்களும் பங்கேற்றனர். இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக நாளை (9ம்தேதி) மருத்துவக்கல்லூரியில் தர்ணா போராட்டம் நடத்தப்படும். தொடர்ந்து மாநில சங்க குழு அறிவிப்பு படி டாக்டர்கள் செயல்படுவார்கள் என்று, அரசு டாக்டர்கள் சங்க குமரி மாவட்ட தலைவர் டாக்டர் சுரேஷ் கூறினார்.