கீழ்வேளூர், மே 11: நாகை மாவட்டம் கீழ்வேளூர். திருக்குவளை பகுதியில் 5 மாதத்திற்கு பின் கடந்த 3 நாட்களாக மழை பெய்தது. இந்த மழை கோடை உழவுக்கு ஏற்றதாக உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாகை மாவட்டம், கீழ்வேளூர் மற்றும் திருக்குவளை பகுதியில் கடந்த 3 நாட்களாக காலை நேரத்தில் மேகமூட்டம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கீழ்வேளூர், திருக்குவளை பகுதியில் ஆங்காங்கே கன மழையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்தது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் வெயில் சுட்டெரித்தும், கடந்த சில நாட்களாக அனல் காற்றும் வீசி வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக வானம் மேகமூட்டம் காணப்பட்டு வெயில் மறைந்து குளர்ச்சியான தன்மை நிலவியது. மேலும் கடந்த 3 நாட்களிலும் ஆங்காங்கே பலத்த மழையும், பல இடங்களில் லேசான மழை தூரல் சிறிது நேரம் மழை என மாறிமாறி பெய்தது. 3 நாள் மழையில் கீழ்வேளூர், திருக்குவளை பகுதியில் பெரும்பாலான பகுதியில் கோடை உழவுக்கு தேவையான மழை பெய்துள்ளதால் சாகுபடி பணிக்கு ஏற்றதாக அமைந்துளளதால் இந்த ஆண்டு சாகுபடி பணியை தொடங்கலாம் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.