ஆறுமுகநேரி, மார்ச் 17: தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தைச் சேர்ந்த சுந்தரம் மகன் முத்துவேல்(47). இவரது வேனில் வெள்ளமடத்தைச் சேர்ந்த 16 பேர் காயல்பட்டினத்தில் உள்ள சிங்கித்துறையில் கனவா மீன் பிடிப்பதற்காக நேற்று அதிகாலையில் புறப்பட்டு வந்துள்ளனர். வேனை தூத்துக்குடி வெள்ளமடத்தை சேர்ந்த அந்தோணி செல்வம் மகன் காளிசுதர்சன்(26) என்பவர் ஓட்டிவந்தார். பின்னர் மீன்பிடித்துவிட்டு மாலையில் ஊருக்கு திரும்பியுள்ளனர். காயல்பட்டினம் பைபாஸ் சாலை வழியாக வேனில் வரும்போது பைக் ஒன்று திடீரென குறுக்கே வந்துள்ளது. இதையடுத்து பைக் மீது மோதாமல் இருக்க டிரைவர் வேனை வலதுபுறம் திருப்பியதில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் அருகில் இருந்த மின்கம்பம் சாய்ந்தது. வேனில் இருந்த தொழிலாளர் அனைவருக்கும் காயமடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அதிக காயமடைந்த 6 பேர்தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.மின்கம்பம் சேதமடைந்ததால் காயல்பட்டினம் – திருச்செந்தூருக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர்கள் ஆறுமுகநேரி ஜெபஸ்சாம், காயல்பட்டினம் சீராஜுதீன், திருச்செந்தூர் முத்துராமன் ஆகியோர் மின்விநியோகத்தை மாற்று வழியில் வழங்கினர். இதனால் சுமார் 1 மணி நேரம் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மாலை 7மணியளவில் புதிய மின்கம்பம் நடப்பட்டு மின்விநியோகம் சீரமைக்கப்பட்டது.